தஞ்சை, அக். 12: ஒழுகச்சேரியில் இயங்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டரிடம் திருவிடைமருதூர் அருகே அணைக்கரை ஊராட்சி ஒழுகச்சேரி கிராமத்தை சேர்ந்த காந்தி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் ஒழுகச்சேரியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக கடை திறக்கும் முடிவை அரசு கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இதில் அந்த வழக்கின் மனுவின் பேரில் கலெக்டர் விசாரித்து முடிவெடுக்க கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் அம்மனுவை பரிசீலிக்காமலேயே கடந்த 10ம் தேதி இரவு 7 மணிக்கு திடீரென மேற்கண்ட கிராமத்தில் டாஸ்மாக் கடையை அதிகாரிகள் திறந்துள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
காசி மடத்துக்கு சொந்தமான இடத்தை 99 ஆண்டு குத்தகைதாரராக பெற்று அதன்பேரில் வழங்கப்பட்ட மற்றும் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மடத்தினுடைய விதிகளுக்கு புறம்பாக அரசு, மடம் சார்ந்த நிலங்கள், சொத்துகளுக்கு வழிகாட்டி வகுத்துள்ள நெறிமுறைகளை மீறி கட்டிடம் கட்டி மடத்தினுடைய ஆகம மற்றும் நடைமுறை விதிமுறைகளுக்கு புறம்பாக டாஸ்மாக் மதுபான கடை திறப்பது என்பது சட்டவிரோத செயலாகும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.