தஞ்சை,அக். 12: தஞ்சை தெற்கு, வடக்கு, மாநகர காங்கிரஸ் சார்பில் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சிரிவெல் பிரசாத், ராஜேந்திரன் தலைமை வகித்தனர். தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், மாநகர காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஒவ்வொரு நிர்வாகிகளாக பேசினர். தஞ்சை எஸ்சி, எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பொன்.நல்லதம்பி பேசும்போது, இந்த கூட்டத்துக்கு மட்டுமல்ல எந்த கூட்டத்துக்கும் எனக்கு அழைப்பு வருவதில்லை. எனக்கு மட்டுமல்ல பல்வேறு பிரிவு தலைவர்களுக்கும் அழைப்பு கொடுப்பதில்லை. இப்படி செய்தால் கட்சி எப்படி வளர்ச்சியடையும். என்னை ஏன் ஒதுக்குகிறீர்கள். எஸ்சி, எஸ்டி மக்களின் வாக்குகள் காங்கிரசுக்கு தேவையில்லையா என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பலர் இதை ஆமோதித்து குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது மாநகர தலைவர் ராஜேந்திரன் பேசும்போது, நீங்கள் தெற்கு மாவட்டம். நான் மாநகர மாவட்டம். இதற்கு நான் பொறுப்பல்ல என்றார். அதற்கு தெற்கு மாவட்டம் மட்டுமல்ல 3 மாவட்டத்துக்கு எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு நான் தான் தலைவர் என்று பொன்.நல்லதம்பி கூறினார். இதையடுத்து பொன். நல்லதம்பியிடம் இனி இதுபோல் நடக்காது என்று மேலிட பார்வையாளர்கள் கூறினர். இதையடுத்து கூட்டம் தொடர்ந்து நடந்தது.