×

ஆலங்குடி பேரூராட்சிக்கு தண்ணீர் வரும் குழாய்களில் உடைப்பு

ஆலங்குடி, அக்.12: ஆலங்குடியிலிருந்து வடகாடு செல்லும் சாலையில் காதர்மில் பஸ் ஸ்டாப் அருகே ஆலங்குடி பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் செல்லும் குழாயில் பல மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேலாத்தூர் கிராமத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பேரூராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேலாத்தூர் கிராமத்திலிருந்து பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் செல்லும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.  இந்நிலையில், ஆலங்குடியிலிருந்து வடகாடு செல்லும் சாலையில் காதர்மில் பஸ் ஸ்டாப் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும், இந்த குடிநீர் அப்பகுதியில் உள்ள கழிவுநீருடன் கலக்கிறது. இதனால், ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது அந்த சாலையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்யாமல் தார் சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால், சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன்கருதி சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Alangudi ,
× RELATED ஆலங்குடியில் இல்லம் தோறும் ஸ்டாலின்...