×

பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்

பெரம்பலூர்,அக்.12:  பெரம்பலூர் மாவட்டத்தில் 121 கிராம ஊராட்சிகளிலும் இன்று (12ம் தேதி) மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு  கிராம சபை கூட்டம் நடக்கிறது என கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் இன்று (12ம்தேதி) மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் அடுத்த ஐந்தாண்டில் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அவையனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் ஆலோசித்தல் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அடித்தட்டு மக்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

இவ்வாறு கிராமத்தின் அனைத்துதரப்பு மக்களும் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்தப்படும் போதுதான் கிராம வளர்ச்சிக்கான திட்டமிடல் முழுமை அடைந்ததாக இருக்கும். அதன்படி கிராமசபை கூட்டம் நல்லமுறையில் நடைபெறுவதை கண் காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (கி.ஊ) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இன்று (12ம்தேதி) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற இருக்கும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : meeting ,Special Gram Sabha ,district ,Perambalur ,panchayats ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...