ஜெயங்கொண்டம்,அக்.12: தேசிய அளவில் இந்திய அஞ்சல் நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அஞ்சலகங்களில் வங்கி கணக்கை துவங்கி சேமித்து பயனடைய வேண்டும் என அஞ்சலக அதிகாரி கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்தேசிய அளவிலான இந்திய அஞ்சல் தினம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எம்ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். இயக்குனர் ராஜமாணிக்கம் ஆலோசகர் பிச்சையப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கலந்து கொண்ட திருச்சி மண்டல அஞ்சலக தலைமை கண்காணிப்பாளர் ரங்கநாதன் பேசும்போது, கல்லூரி மாணவர்கள் அனைவரும் அஞ்சல் நிலையங்களில் உள்ள தங்க மகள் சேமிப்பு திட்டம், சிறு சேமிப்பு திட்டம், மற்றும் இந்திய அஞ்சல் துறையில் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அனைத்து மாணவர்களும் சேர்ந்து பயனடைய வேண்டும், இந்த அனைத்து திட்டங்களையும் மக்களிடம் எடுத்து கூறி மக்களும் பயன்பட வேண்டுமென சிறப்புரையாற்றினார். திருச்சி முதன்மை கிளை மேலாளர் சலீம் ராஜா கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இவ்விழாவில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். கல்லூரி இணை செயலாளர் கமல் பாபு, நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கணினி துறை தலைவர் குரு வரவேற்றார். முதல்வர் மதியழகன் நன்றி கூறினார்.