கடவூர், அக்.12: கடவூர் அடுத்த மேலப்பகுதி ஊராட்சி வெறியம்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (60). இவருக்கு சொந்தமான கறவை மாடுகளை வீட்டருகே கட்டி வைத்திருந்தார். நேற்று சிந்தாமணிபட்டி துணை மின்நிலையத்திலிருந்து தேவர்மலைக்கு சென்ற உயர் மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் இரண்டு கறவை மாடுகள் துடி துடித்து இறந்தன. சம்பவம் நடந்து வெகு நேரமாகியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வராததால் அப்பகுதி மக்கள் திருச்சி-பாளையம் சாலையில் மறியல் செய்தனர். இதனை அடுத்து வருவாய் ஆய்வாளர் டேவிட், சிந்தாமணிபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், விஏஓ மணிவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் ஜெகதீசன் மாடுகளை ஆய்வு செய்தார்.