க.பரமத்தி, அக். 12: குடும்ப அட்டையில் இரு சிலிண்டர் என தவறான பதிவை சீரமைத்து மண்ணெண்ணை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையால் ஓராண்டுக்கு மேலாக ஒன்றியம் முழுவதும் ஏழை எளியோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஏராளமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி வட்டத்தில் சுமார் 54 ஆயிரத்து மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 125 நியாய விலைக்கடைகளும் இதில் சுமார் 87 முழு நேர கடைகள் செயல்பட்டு வருகிறது. கீழ் இயங்கி வரும் நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைகளில் சர்க்கரை கார்டு, மண்ணெண்ணெய் கார்டு, அரிசி கார்டு என பிரிக்கப்பட்டுள்ளது அரிசி கார்டு என்றால் மாதம் 20 கிலோ வரை அரிசி பெறலாம் இதேபோல் சர்க்கரை கூடுதலாகவும்; மண்ணெண்ணெய் தேவைப்படுவோர் அந்த கார்டுக்கு கூடுதல் அளவு மண்ணெண்ணெயும் பெற்று வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் அரிசியை தவிர துவரம், உளுத்தம்பருப்பு, பாமாயில், மசாலா பொருட்கள் அடங்கிய பாக்கெட் போன்றவை குறைந்த விலையில் முன்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அரிசியை தவிர பிற பொருட்கள் ரேஷனில் கிடைப்பது அரிதாக உள்ளது மேலும் கடந்த ஆண்டு குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் போது ஒன்றியத்தில் உள்ள நியாய விலை கடையில் பயன் பெறும் ஏராளமான
குடும்ப அட்டை பயனாளிகளுக்கு 2 காஸ் சிலிண்டர் வைத்திருப்பதாக தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மண்ணெண்ணை வழங்க இயலாது. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் விற்பனையாளர் இதற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே இருப்பதாக காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்று அவற்றை அரவக்குறிச்சி வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்கும்படி பயனாளிகளை கேட்டு கொணட நிலையில் பொதுமக்களும் காஸ் சிலிண்டர் நிறுவனத்தில் உரிய ஆவணம் பெற்று அதனை அதிகாரிகளிடம் வழங்கினர்
இதற்கிடையில் புதியதாக ஸ்மாட் குடும்பஅட்டைகள் வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் குடும்ப அட்டையில் தவறான பதிவால் ஓராண்டு 7மாதங்களை கடந்தும் மண்ணெண்ணை பெற முடியாமல் ஒன்றியம் முழுவதும் ஏழை எளியோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் புலமபி வருகின்றனர்.