பொள்ளாச்சி,அக்.12: விஜயதசமியையொட்டி பொள்ளாச்சியில் உள்ள பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி நேற்று முன்தினம் முதல், நவராத்திரி உற்சவ விழா ஆரம்பிக்கப்பட்டது. இதில் சூலக்கல் மாரியம்மன் கோயிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் நடந்த சிறப்பு அலங்கார பூஜையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல் ஆ.சங்கம்பாளையம் சக்தி மில் அருகே உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி வரும் 19ம் தேதி வரை ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு அலங்கார பூஜைகள் நடக்க உள்ளது. அதுபோல், கன்னிகாபரமேஸ்வரியம்மன் கோயில்,
பையாஸ்கோப் சவுடாம்பிகையம்மன் கோயில், கோட்டூர்ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன்கோயில், பாலக்காடுரோடு லட்சுமிநரசிம்மர் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில்களில் விஜயதசமியையொட்டி நவராத்திரி உற்சவ விழா துவங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை நடக்க உள்ளது. மேலும், நகர் மற்றும் சுற்று வட்டார கிராமப்பகுதியில் உள்ள பல வீடுகளில், கொலுபொம்மை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.