×

சட்டவிரோத டாஸ்மாக் பார்களை அகற்ற வேண்டும்

திருப்பூர், அக். 12:   திருப்பூர் கலெக்டர் பழனிசாமியிடம் டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் அன்பு ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் நகரம், உடுமலை, தாராபுரம், காங்கயம், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், முத்தூர் மற்றும் மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் 238 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுடன் இணைந்து 97 பார்கள் மட்டுமே முறையான அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 141 பார்களும் எந்த முறையான அனுமதியும் இல்லாமலும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு உரிமத்தை புதுப்பிக்கப்படாமல் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன. இந்த பார்களில் விற்பனை நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படும் நிலை தொடர்கிறது. பார் உரிமையாளர்கள் அதன் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் சரக்குகளைக் கேட்டு மிரட்டுவதும், பயமுறுத்தி சரக்குகளைப் பெற்றுக் கொள்வதும், தகராறு செய்வதும் நீடித்து வருகிறது.

இதனால் ஊழியர்கள் பணிகளில் முழுமையாக ஈடுபட இயலாத நிலையும்,  மன உளைச்சலுக்கும் ஆளாகி தொடர்ந்து சிரமப்படுகின்றனர். சட்டவிரோத பார்களால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்துவதுடன் தனிநபர்கள் முறைகேடாக வருமானம் சேர்க்கின்றனர். எனவே இந்த பார்களை தயக்கமின்றி அகற்றி, அரசுக்கு வருமானம் ஏற்படுத்தும் முறையான பார்களை உருவாக்க நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோரிக்கையை கேட்ட மாவட்ட கலெக்டர், உடனடியாக சப்-கலெக்டர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோருக்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...