ஈரோடு, அக்.12: ஈரோட்டில் புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 புதிய வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. டெல்லியில் இருந்து ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள தனியார் ஷோரூமிற்கு ரூ.25லட்சம் மதிப்பிலான 55 புதிய இருசக்கர வாகனங்களை கன்டெய்னர் லாரி ஏற்றி வந்தது. லாரியை வட மாநிலத்தை சேர்ந்த அஸ்கர்(55) என்பவர் ஓட்டிவந்தார். இந்த லாரி நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கை அடுத்த காந்திஜி ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்து புகை வெளியே வந்தது. இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் லாரி டிரைவரிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு டிரைவர் லாரியை உடனடியாக நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த 3 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியின் மேற்கூரையில் மின்சார ஒயர்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.