ஈரோடு, அக். 12: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரம் தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகள், எருமைமாடுகள், வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சந்தையான இந்த மாட்டுச்சந்தைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் வந்து செல்கிறார்கள். மாடுகளை வாங்கி செல்வதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள்.