ஈரோடு, அக். 12: பாசன வாய்க்கால்களை சேதப்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி திட்ட பாசனம் மற்றும் மேட்டூர் வலது கரை வாய்க்கால் பாசனத்தின் கீழ் வரும் ஆயக்கட்டு பகுதிகளில் புதிய கொப்பு வாய்க்கால்கள் அமைத்து தரக்கோரியும், ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட கொப்பு வாய்க்கால்களை மீண்டும் ஏற்படுத்திக்தரக்கோரியும் பாசனதாரர்களால் ஏராளமான கோரிக்கை மனுக்கள் வந்து கொண்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள கோட்டாட்சியர்களிடம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். ஆயக்கட்டு பகுதி என்பது அரசால் ரிஜஸ்டர் செய்யப்பட்ட நிலங்கள் ஆகும். எனவே ஆயக்கட்டு பகுதிகளில் செல்லும் கொப்பு வாய்க்கால்களில் ஓடும் தண்ணீரை தடுக்கவோ, பாதிக்க செய்யும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக்கூடாது. சட்டத்தை மீறி செயல்படுவோர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் ஆகியவை விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.