ஈரோடு, அக்.12: கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பெயரை மாற்றம் செய்ய பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயில் சைவ,வைணவ ஒற்றுமைக்கு பெயர் பெற்ற கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் பெயர்களை மகுடேஸ்வரர் என்பதற்கு பதிலாக மகுடேஸ்வர சுவாமி என்றும் வீரநாராயண பெருமாள் என்பதற்கு பதிலாக வீரநாராயண பெருமாள் சுவாமி என்றும் பெயர் மாற்றம் செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரோடு பாரதிய ஜனதா கட்சி பழைய பெயரிலேயே கோயில் அழைக்கப்பட வேண்டும் என்றும், பெயர் மாற்றம் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் கலெக்டர் கதிரவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பெயர் மாற்றம் செய்ய அறநிலையத்துறை மூலம் எந்த உத்தரவும் வரவில்லை. செயல் அலுவலர் தன்னிச்சையாக பெயர் மாற்றியுள்ளார். அவருக்கு அதற்கான அதிகாரமும் இல்லை. அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலம். மகுடேஸ்வரரை, பிரம்மன் பூஜித்த ஸ்தலமாகும். இப்பெருமை பெற்ற கோயிலை பெயர் மாற்றம் செய்துள்ளதை திரும்ப பெற்று முன்பு போலவே பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.