தேவகோட்டை, அக். 12: தேவகோட்டை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரித்திகா (14). இவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கூடம் சென்றபோது ஆண்டவர் செட் புவனேஸ்வரி அம்மன் கோவிலை கடக்க முயன்றார். அப்போது தேவகோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த தனியார் பஸ் அரசு டவுன்பஸ்ஸை முந்த முயன்றபோது ரித்திகா மீது பலமாக மோதியது. இதில் தூக்கி எறியப்பட்டு ரிதிக்காவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரித்திகாவை மீட்ட பொதுமக்கள் வடக்கு சிலம்பனித் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்து இருந்ததால் தீவிர சிகிச்சைக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச் சம்பவம் குறித்து தேவகோட்டை டவுன் போலீஸ் நிலைத்தில் அவரது தாயார் சிவனேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் ஜெயவீரபாண்டியனை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் காரைக்குடியை நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தேவகோட்டை நோக்கி அரசு பஸ் வந்தது. தேவகோட்டை அருகே சடையன்காடு அருகே மதுரை பஸ் மீது முதுகுளத்தூரிலிருந்து வந்த பஸ் மோதியது. இதில் காரைக்குடி சேதுராமன், தேவகோட்டை உமாமகேஸ்வரி, தாரணி, ராஜசேகர் ஆகியோர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிந்து காயமடைந்தவர்களை தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.