திருமங்கலம், அக்.12: திருமங்கலத்தில் காதலித்த பெண்ணின் மீது ஆசீட் வீசுவேன் என மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்(22). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் படிக்கும்போது உடன் படித்த மாணவியை காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தினை சார்ந்தவர்கள் என்பதால் மாணவியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படித்து முடித்துவிட்டு இருவரும் தற்போது வேறுவேறு பகுதிகளில் பணியில் உள்ளனர். இந்நிலையில் பிரேம்குமார் காதலித்த பெண்ணிற்கு சமீபத்தில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இதனையறிந்த பிரேம்குமார் காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். காதலியின் பெற்றோர் மறுத்துள்ளனர். உடனே தான் காதலித்த பெண்ணிடம், இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை காட்டி மிரட்டி தன்னை தவிர்த்து வேறு யாரையும் திருமணம் செய்தால் முகத்தில் ஆசீட் வீசுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.