பழநி, அக். 12: பழநி அதன் சுற்றுப்புற கிராமங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் கடித்ததில் பழநி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பலர் காயமடைந்து பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். கடந்த மாதம் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்ட பழநியை சேர்ந்த ஒரு பெண் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். நேற்று முன்தினம் இரவு பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சாலையில் நடந்து சென்றவர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று கடித்தன. இதில் பாலசமுத்திரத்தை சேர்ந்த உதயகுமார் (27), பழநி இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த் (20), காமராஜர்நகரை சேர்ந்த மகாமுனி (60), மாயவன் (40), இட்டேரி ரோட்டை சேர்ந்த ஹசீப் (27), பெருமாள் மகன் பூமிநாதன் (25), அழகாபுரியை சேர்ந்த முனீஸ்வரன் (17), மரிச்சிலம்பை சேர்ந்த ராஜா மகள் சத்யபிரியா (6), மதனபுரத்தை சேர்ந்த அங்குராஜ் (30) ஆகியோர் படுகாயமடைந்தனர்.