வேடசந்தூர், அக். 12: வேடசந்தூர் கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றனர். பழநி கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. பழநி மாவட்ட கல்வி அலுவலர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேனி முன்னிலை வகித்தார். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 80 பள்ளிகள் பங்கேற்றன.
இதில் கோ.ராமநாதபுரம் பள்ளிளைச் சேர்ந்த மாணவிகள் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தடகளப் போட்டிகளில் 5 ஆயிரம் மீட்டர், 3 ஆயிரம் மீட்டர், 800 மீட்டர், 100 மீட்டர் மற்றும் ஈட்டி எரிதல், தட்டு எரிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் முதலிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களான முனியப்பன், செந்தில்வடிவு, சத்யஜோதி ஆகியோரையும் பாராட்டினர்.