தொடர் மழையால் வளமானது வனப்பகுதி விளை நிலங்களுக்குள் விலங்குகள் வருகை குறைவு

பழநி, அக். 12:  திண்டுக்கல் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இங்கு அதிகளவில் வரிப்புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், கேளையாடு, பன்றி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதி வறண்டது. இதனால் குடிநீர் மற்றும் உணவு தேடி விலங்கினங்கள் வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களுக்குள் நுழைய ஆரம்பித்தன. இதனை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல், வெடி வெடித்தல், அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. விலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிக்குள் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

காய்ந்து போன மரங்கள் மற்றும் புற்கள், மீண்டும் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. இதனால் விளை நிலங்களுக்குள் விலங்குகள் வருவது குறைந்துள்ளது.

இதுகுறித்து பழநி வனச்சரகர் கணேஷ்ராம் கூறியதாவது, ‘மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் வனப்பகுதிக்குள் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் வனத்துறை சார்பில் ஏராளமான அளவில் தடுப்பணைகள் மற்றும் நீர்த்தொட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை தற்போது நிரம்பி வருகின்றன. வனப்பகுதிக்குள் புதிதாக புற்களும் முளைத்துள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி விளை நிலங்களுக்குள் செல்லும் விலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனினும், விலங்குகளின் நடமாட்டம் வனத்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: