போளூர், அக்.12: போளூரில் பிரபல நகைக் கடைகளில் வருமானத்துறையினர் ேநற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.தமிழகம் முழுவதும் வரிகட்டாமல் ஏமாற்றி வருபவர்கள் யாரென்று அடையாளம் காணப்பட்டு அவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வருமான வரித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினர் மாவட்ட வாரியாக உள்ள பெரிய நிறுவனங்கள், பிரபலமான நகைக்கடைகள் போன்ற இடங்களில் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து 6 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 14 பேர் கொண்ட குழுவினர் போளூரில் உள்ள பிரபல நகைக் கடைகளில் நேற்று மாலை 3.30 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், கடைகளில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு கடையில் நீண்ட காலமாக பணியாற்றும் வேலையாட்களை மட்டும் கடைக்குள் வைத்து மீதமுள்ள பணியாட்களை வெளியே அனுப்பி விட்டனர். மேலும், நகைக்கடையின் முன்புற கதவை அடைத்துவிட்டு தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், நகைக் கடையில் செய்த வியாபாரத்திற்கு ரசீதுகள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா? வருமானவரி சரியாக கட்டப்பட்டுள்ளதா? கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதா என தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை காரணமாக போளூர் பஜார் வீதி பகுதியில் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.