குடியாத்தம், அக். 12: குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில்(45). இவர் மீது குடியாத்தம் டவுன் போலீசில் கந்துவட்டி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இஸ்மாயில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி அதே பகுதியை சேர்ந்த அல்லாபகஷ் என்பவரிடம் வட்டிக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அல்லாபகஷ் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அல்லாபகஷ் கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 4ம் தேதி இஸ்மாயிலை கைது செய்தனர். இதையடுத்து கடந்த 9ம் தேதி இஸ்மாயில் ஜாமீனில் வெளியே வந்தார்.
நேற்று முன்தினம் காலை கையெழுத்து போடுவதற்காக குடியாத்தம் காவல்நிலையத்திற்கு சென்ற இஸ்மாயில், அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கமலகண்ணனிடம் தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தாராம். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி கையெழுத்து போடாமல் சென்றாராம்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள இஸ்மாயிலை தேடி வருகின்றனர்.