திருப்பூர், அக்.5: திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு அருகே ரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த ராஜீவ் (30) என்பதும், பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ராஜீவ் ரயிலில் அடிபட்டு இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், கூலிபாளையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற திருப்பூர் படையப்பா நகரை சேர்ந்த மணிகண்டன் (30) ரயிலில் அடிபட்டு இறந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.