திருவெண்ணெய்நல்லூர், செப். 26: தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை விதித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்து 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை நாட்களிலும் திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக சிறப்பு வகுப்புகள் காலை முதல் மாலை நடந்து வருகிறது. இதேபோல் விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு அரசு பள்ளி மற்றும் கோலியனூர் அரசு பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடந்ததாக மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து சிறப்பு வகுப்புகளை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.