தேசிய சத்துணவு விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி, செப். 26:நெல்லித்தோப்பில் தேசிய சத்துணவு விழிப்புணர்வு பேரணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய  சத்துணவு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சத்துணவு  தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லித்தோப்பில்  பேரணி நேற்று நடைபெற்றது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பண்டங்களை  தட்டுகளில் ஏந்தியும், மணிமேகலை அரசு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு  பதாகைகளை பிடித்தபடியும் பேரணியில் பங்கேற்றனர்.

கொசப்பாளையம் மணிமேகலை அரசு பள்ளி அருகில் இப்பேரணியை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு செயலர் ஆலிஸ்வாஸ், மகளிர் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஸ்வந்தய்யா, வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரணி லெனின்வீதி, திருவள்ளுவர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்று மணிமேகலை பள்ளி முன்பு முடிவுற்றது.

Related Stories: