மதுரை, செப். 26: பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தல்லாகுளம் தலைமை அலுவலகம் முன், அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில், கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். நிலுவைத் தொகை கணக்கீட்டு முறை மாற்றியமைக்கப்பட்டு, 2016க்கு பின்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் பணப்பலன் வழங்க வேண்டும். பணிக்கொடை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குரூப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஊழியர்களின் பங்களிப்பாக மாதம் ரூ.500 பிடித்தம் செய்து ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும். பத்து சதவீதம் பிடித்தம் செய்து அதே அளவு இலாகாவும் பங்களிப்பை செலுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் கோட்ட செயலாளர் மதியழகன், கோட்ட தலைவர் கிஷோர்குமார், கோட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், கோட்ட செயலாளர் மாயாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.