பழநி, செப். 26: பழநி அருகே அ.கலையம்புத்தூர் பகுதியில் குடிநீர் விநியோக குளறுபடியால் 100 நாள் வேலைக்கு செல்ல தாமதமாகிறது. இதனால் அங்கு பணி மறுக்கப்படுவதாக கூறி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பழநி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் சரியான நேரங்களில் விநியோகம் செய்யப்படுவதில்லை. காலை, மதியம், மாலை நேரம் என மாற்றி மாற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் 100 நாள் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். குடிநீர் பிடித்து வைத்துவிட்டு செல்லும்போது தாமதமாகுவதால் அங்கு பணி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.