பழநியில் நெருங்குது சீசன் விடுதிகளாக மாறும் வீடுகள் கண்காணிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி, செப். 26:  ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்க உள்ள நிலையில் பழநியில் உள்ள பல வீடுகள் விடுதிகளாக உருமாறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி வைகாசி மாதம் வரை பழநி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சீசன், பொங்கல் பண்டிகை விடுமுறை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என தொடர்ச்சியாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு பக்தர்கள் வருகையை பயன்படுத்தி பழநி அடிவார பகுதியில் உள்ள பல வீடுகள் தற்போது விடுதிகளாக முகம்மாறி உள்ளன. சந்து, பொந்துகளில் உள்ள தங்களது இருப்பிடத்திற்கு பக்தர்களை புரோக்கர்கள் மூலம் அழைத்து சென்று விடுகின்றனர். அங்கு போதிய வசதிகள் இருப்பதில்லை என்றும், வாடகைகள் சொல்வதொன்றும், வசூலிப்பது ஒன்றாகவும் இருப்பதாகவும் பல பக்தர்கள் புகார் தெரிகின்றனர்.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் கதிரேசன் என்பவர் கூறியதாவது, வழக்கமாக வரும் சுற்றுலா வாகன டிரைவர்களை இங்குள்ளவர்கள் சரிசெய்து வைத்து கொள்கின்றனர். அவர்கள் எவ்வித அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இல்லாத இடத்திற்கு தங்க வைக்க அழைத்து செல்கின்றனர். அங்கு வாடகை சொல்வதொன்றும், வசூலிப்பது ஒன்றாகவும் இருக்கிறது. தவிர, சுடுதண்ணீருக்கு ஒரு தொகை, மின்விசிறிக்கு ஒரு தொகை, கழிப்பறைக்கு ஒரு தொகை என மிரட்டி வசூலித்து ஏமாற்றுகின்றனர்.  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் களஆய்வு செய்து அனுமதியின்றி செயல்பட்டு வரும் லாட்ஜ்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: