தூத்துக்குடி, செப். 26: கமலேஷ்சந்திரா கமிட்டி அறிக்கையை முழுமையாக அமல்படுத்தக் கோரி தூத்துக்குடி, கோவில்பட்டியில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் மாதத்தின் கடைசி நாளை பணி ஓய்வு நாளாக அறிவிக்கவேண்டும், மருத்துவ வசதி வழங்க வேண்டும், ஊதியக்குழு கோரிக்கையை 2016 ஜன. 1 முதல் அமல்படுத்தவேண்டும். 3 சதவீதம் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும். கமலேஷ்சந்திரா கமிட்டி அறிக்கையை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி கோட்ட ஊரக அஞ்சல் ஊழியர் சங்க செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். தூத்துக்குடி கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கச் செயலாளர் அதிசயராஜ் முன்னிலை வகித்தார். 3ம் பிரிவு கோட்டச் செயலாளர் மனோகரன் தேவராஜ் உண்ணாவிரதத்தை துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபர் 4ம் தேதி சென்னையில் மாநில அலுவலகம் முன்பாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் தூத்துக்குடி கோட்டத்தில் இருந்து திரளாகப் பங்கேற்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
கோவில்பட்டி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜிடிஎஸ் மாநில தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். அஞ்சல் மூன்றாம் பிரிவு மாநில தலைவர் செல்வகிருஷ்ணன், அஞ்சல் நான்கு மாநில செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினர். அஞ்சல் 3 மற்றும் 4ம் நான்கு கோட்ட செயலாளர்கள் அருள்ராஜன், பெரியசாமி, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க ஜிடிஎஸ் கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அஞ்சல் மூன்று மற்றும் நான்கு சங்கரன்கோவில் கிளை செயலாளர்கள் கோமதிசங்கர், கோவிந்தன், தென்காசி கிளைச் செயலாளர்கள் சண்முகவேல், சிவசங்கரன் பேசினர்.