வேலூர் மாவட்டத்தில் எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்? உளவுத்துறை தீவிர கண்காணிப்பு

வேலூர், செப்.26: வேலூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் இருக்கிறதா? என்பதை கண்டறிய எல்லைப்பகுதிகளில் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்குதேச கட்சி எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆகிய 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்தனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாவோயிஸ்டுகள் 3 பேரின் புகைப்படங்களை ஆந்திர போலீசார் நேற்று முன்தினம் வெளியிட்டனர். இந்நிலையில், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து கொரில்லா ஆயுதப் போராட்டம் நடத்தப்போவதாக மாவோயிஸ்டுகள் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், 3 மாநில எல்லைப்பகுதிகளில் உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதில் வேலூர் மாவட்டம் தமிழகத்தின் கர்நாடகா, ஆந்திர எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் மாவோயிஸ்டுகள் இங்கு ஊடுருவியுள்ளார்களா? என்பதை கண்காணிக்க எல்லைப்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் எல்லையோர கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தின் ஆந்திரா, கர்நாடகா எல்லைப்பகுதிகளில் புதிய நபர்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்கும்படி உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதன்படி, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுதவிர நக்சல் தடுப்பு பிரிவு, கியூ பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு உட்பட உளவுத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் அருகே பள்ளிப்பட்டு முதல் குடியாத்தம், வாணியம்பாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் புதிதாக உளவுத்துறையினர் களமிறங்கியுள்ளனர். அவர்கள் கிராமத்தை பூர்விகமாக கொண்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு புதிதாக கிராமத்துக்கு வந்திருப்பவர்கள் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.ஆந்திர- தமிழக போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், எல்லையில் உள்ள செக்போஸ்ட்களில் தீவிரமாக சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.

இந்நிலையில், நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் வேலூர் மாவட்ட மலைக்கிராமங்களான கருங்காலிகுப்பம், வரகூர்புதூர், மேட்டுக்குடிசை, நொறுக்குப்பாறை ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கிராம மக்களிடம் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர். மேலும் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: