முகத்தை சிதைத்து சென்ற கும்பல் ஓட, ஓட விரட்டி ரவுடி அடித்துக் கொலை: வேலூர் பாலாற்றில் நள்ளிரவில் பயங்கரம்

வேலூர், செப்.26: வேலூர் பாலாற்றில் நள்ளிரவில் ரவுடியை ஓட, ஓட விரட்டி அடித்து முகம் சிதைத்து கொடூர கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் பாலாற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று அதிகாலை முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வாலிபர் கொலை செய்யப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் உள்ள முட்புதரிலும், அருகிலும் ரத்தக்கறையுடன் 2 வாழைத்தார் தண்டுகள் கிடந்தன. மேலும் வாலிபர் சடலத்துக்கு அருகில் உடைந்த பாட்டில்களும் கிடந்தன. இதனால், குடிபோதையில் இருந்த கும்பல் வாலிபரை ஓட, ஓட விரட்டி வாழைத்தார் தண்டுகளால் அடித்துக் கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சடலம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, பாட்டில் மற்றும் கத்தியால் கொடூரமாக குத்தி முகத்தை சிதைத்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன், ரத்தக்கறை படிந்த மண், வாலிபரை கொலை செய்வதற்காக பயன்படுத்திய வாழைத்தார்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சேகரித்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை ஆய்வு செய்ததில் அதிலிருந்த சிம்கார்டையும் கொலைக்கும்பல் எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதனால், ஐஎம்இஐ நம்பரை வைத்து கொலையாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொலையான வாலிபரின் வலது கையில், ‘சரவணன், சரண்யா’ என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், வாலிபரின் பாக்கெட்டில் இருந்த செல்போனில் இருந்த எண்களை போலீசார் தொடர்பு கொண்டதில், அவர் வேலூர் சைதாப்பேட்டை சின்னண்ண கவுண்டர் தெருவை சேர்ந்த கார் டிரைவர் பிச்சைபெருமாள்(31) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில், இவர் பிரபல ரவுடி வசூர் ராஜா கும்பலை சேர்ந்தவர் என்பதும், இவர் மீது கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உட்பட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனால், கொள்ளையடித்தவற்றை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், பிச்சைபெருமாளின் வலது கையில் பச்சை குத்தப்பட்டிருந்த ‘சரவணன், சரண்யா’ ஆகிய பெயர்கள் அவரது அக்காள் பிள்ளைகளுடையது என்று கூறி கொலையானவர் பிச்சைபெருமாள் தான் என்று அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் உறுதிப்படுத்தினர்.

மேலும் கொலையில் உறவினர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடியை ஓட, ஓட விரட்டி அடித்துக் கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories: