திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் திடீர் மாற்றம்

திருச்சி, செப்.25:  திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த நிகிலா ராஜேந்திரன் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  சென்னை புழல் சிறையில் எல்இடி டிவிக்கள், செல்போன்கள், கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அங்குள்ள கைதிகள் சிலர் அதிகாரிகள் உதவியுடன் நட்சத்திர ஓட்டலில் உள்ளது போல சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறைகளில் சோதனை நடத்த திட்டமிட்டு கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை சிறைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் கடந்த 20ம் தேதி  சோதனை நடத்தினர். உதவி கமிஷனர் தலைமையில் 10 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவற்றில் விசாரணை கைதிகள் மட்டுமின்றி, தண்டனை கைதிகளும் உள்ளனர்.

அவர்களிடம் பீடி, சிகரெட், கஞ்சா, மதுபானங்கள் மற்றும் சொகுசு வாழ்க்கைக்குரிய பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தப்பட்டது. கழிப்பறைகள், மருத்துவமனை, நூலகம் ஆகியவற்றிலும் இச்சோதனை நடத்தப்பட்டது.  இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளராக இருந்த நிகிலா ராஜேந்திரன் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக முருகேசன் பதவி உயர்வு பெற்று சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  இதேபோல புழல், கோவை, சேலம் உட்பட பல்வேறு மத்திய சிறைகளின் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது சிறைத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: