திருச்சி, செப்.25: திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் அரசியலமைப்பு மாநாடு மோடி அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்தும் விதமாக அமையும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
மனித நேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட மாநாடு வருகிற அக்டோபர் 7ம் தேதி திருச்சி ஏர்போர்ட் அருகே நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தை மாநில தலைவர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முக்கிய கால கட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அரசியல் நிர்ணய சபை வழங்கியுள்ள அடிப்படை கூறுகளான மதசார்பின்மை, ஜனநாயகம், சமதர்மம் போன்றவற்றை மோடி அரசு சிதைத்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இருந்து மாறி ஆர்எஸ்எஸ் கொள்கையை ஒத்து ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.