திருச்சி, செப்.25: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழிகாட்டுதல்படி இயங்கும் மக்கள் பாதை அமைப்பு சார்பில், தமிழுக்கு அமுதென்று பேர் என்ற திட்டத்தின் கீழ் ‘தமிழ் கையெழுத்து இயக்கம்’ நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி வந்த சகாயம் ஐஏஎஸ் இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் என ஒரு கோடி கையெழுத்து வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டம் தோறும் மக்கள் பாதை அமைப்பினர் படிவங்களில் கையெழுத்து பெற்று வருகின்றனர். அதன்படி, மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் படிவத்தில் தமிழில் கையெழுத்து பெற்றார். அப்போது, ‘அரசு அதிகாரிகள் தமிழில் கையெழுத்திடும் நடைமுறை அமலில் உள்ளதே’ என கலெக்டர் விளக்கினார். அனைத்து தரப்பினரிடமும் தமிழ் மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கையெழுத்து இயக்கம் என மக்கள் பாதை அமைப்பினர் கூறினர்.