திருச்சி, செப்.25: தஞ்சை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம், திருவையாறு திமுக எம்எல்ஏ தலைமையிலான விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில் குமாரிடம், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் கடைமடை விவசாயிகள் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் தலைமையில் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில், காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம் மாயனூரில் பிரியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனம் கடைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்குட்பட்ட பூதலூர், தஞ்சாவூர் ஒன்றியத்தில் 63 ஏரிகளில் 47 ஏரிகளுக்கு இதுவரை பாசனத்துக்கு போதுமான நீர் வரவில்லை. இந்த நிலை கடந்த 6 ஆண்டுகளாக உள்ளது. இதனால் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கிறது.