×

மூலிகைகளும் அதன் மருத்துவக் குணங்களும்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

மூலிகை செடிகளில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. எந்தெந்த மூலிகை செடிகளில் என்ன பலன்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனை நாம் நம் வீட்டின் மாடித்தோட்டத்திலோ அல்லது பால்கனியில் கூட வளர்க்கலாம்.

துளசி: ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றுக்கு சிறந்தது. ரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்: காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.

அறுகம்புல்: உடல் எடை குறைய, கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத் தளர்ச்சி நீங்க, ரத்தப் புற்றுநோய் குணமடைய ஏற்றது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் அறுகம்புல் சிறந்தது. தோல் வியாதிகள் அனைத்தும் அறுகம்புல்லில் நீங்கும்.

கல்யாண முருங்கை முள் முருங்கை: அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவும். காய்ச்சலைக் குறைக்கும். மாதவிடாய்த் தொல்லை நீங்கும். கிருமிகளை வெளியேற்றும், நீரிழிவு, சீதபேதி, வாதம் குணமடையும்.

கொத்தமல்லி: பசியைத் தூண்டும். பித்தம் குறையும், காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை கரைக்கவும், ரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு ஆகியவை குணமாகும்.

கறிவேப்பிலை: பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும். பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கறிவேப்பிலை போக்க உதவும்.

புதினா: சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும்.

புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ப் பொருள், உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினீக் ஆசிட், ரிபோபிளேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

கற்பூரவல்லி:  மிகச் சிறந்த இருமல் நிவாரணி. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, இருமல் மறையும்.

வல்லாரை: எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழு நோய், யானைக்கால் வியாதி, நரம்புத் தளர்ச்சி, பேதி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.

தூதுவளை: நரம்புத் தளர்ச்சி மறையும். மார்புச்சளி, தோல் வியாதிக்கு நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் சிறந்தது.

முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம் முதலியவற்றிற்கும் சிறந்தது.

- ஆர்.அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!