×

கடத்தப்பட்ட மகளை மீட்டு தர தந்தை கோரிக்கை

சேலம், செப்.25: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், காடையாம்பட்டி அடுத்த சிக்கனம்பட்டி சின்ன நடுப்பட்டியைச் சேர்ந்த  ராஜா, என்பவர் தனது உறவினர்களுடன் திரண்டு வந்து மனு அளித்தார். இதுகுறித்து ராஜா கூறுகையில், ‘எனக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், 15 வயதுடைய மூத்த மகள் 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். வீட்டில் இருந்த இவர், கடந்த 13ம் தேதி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், ராமன் என்ற வாலிபர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து எனது மகளை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஓமலூர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கடத்தப்பட்ட எனது மகளை மீட்டு தர வேண்டும்,’   என்றார்.
விநாயகர் சிலையை அகற்றக்கோரி கொலை மிரட்டல்: வீரபாண்டி ஒன்றியம் கல்பாரப்பட்டி அடுத்த கொம்பாடிப்பட்டி சுகுமார் காலனியைச் சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் கோயில் எதுவும் இல்லாததால், கடந்த விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் கற்சிலை ஒன்று வைத்தோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே பகுதியைச் சேர்ந்த சிலர், சிலையை அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தினர். சிலையை அகற்றாவிட்டால், கொலை செய்துவிடுமோம் என மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்