குடிநீர் கோரி குடங்களுடன் மறியல் திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல், செப். 25: ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து திண்டுக்கல்லில் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டுக்குட்பட்டது ஜோசப் காலனி, பெத்தாலினி காலனி, ரோமானிய மிஷின் 1,2 தெருக்கள். இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் ஒரு நாளைக்கு தண்ணீருக்கு மட்டும் ரூ.25 செலவழித்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கொதிப்படைந்த இப்பகுதி மக்கள் நேற்று திண்டுக்கல்- திருச்சி சாலையில் கல்லறை தோட்டம் அருகே காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்காத மாநகராட்சியை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் நகர் வடக்கு போலீசார், மாநகராட்சி அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என உறுதியளித்தனர். அதன்பின்பே மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் திண்டுக்கல்- திருச்சி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: