திருப்பூர், செப். 25: திருப்பூர் நகர பகுதியில் உள்ள நீர்வழி ஓடைகளை ஆக்கிரமித்து குடியிருப்பு, வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி–்த்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். திருப்பூர் ஜம்மனை ஓடை, வீரபாண்டி வழியாக செல்லும் ஓடை, சின்னக்கரை ஓடை, சக்தி தியேட்டர் வழியாக செல்லும் ஓடை உட்பட 10 க்கு மேற்பட்ட சிறு ஓடைகள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் வழியாக சென்று இறுதியில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இந்த ஓடைகளில் சாக்கடை கழிவு நீர், சாயப்பட்டறைகளில் சாய கழிவு நீர் வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனதால் நீர் வழி ஓடைகளில் தொடர் நீரோட்டம் தடைபட்டது, இதனால், நீர் வழி ஓடைகளின் இரு கரைகளிலும் பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய பொது மக்கள் ஆபத்தை உணராமல் குடிசைகள் அமைத்து வசிக்கின்றனர். திருப்பூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் வழி ஓடைகளை கண்காணிப்பு இல்லாததால் கட்டுமானப்பொருட்களில் கழிவுகள், பின்னலாடை கழிவுகளை கொட்டிவருகின்றனர். இதனால் நீர் வழி ஓடைகள் அடைபட்டு மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் மழை நீர் புகும் அபாயம் உள்ளது. இதனால், உயிர்சேதமும், உடமைகளை இழந்து பொருளாதார ரீதியாக பொது மக்கள் கடுமையான பாதி்க்கும் நிலை உள்ளது.
திருப்பூர் மாநகர் பகுதிக்குள் செல்லும் நீர் வழி ஓடைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கம்பி வேலி அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.