ஈரோடு, செப். 25: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக அதிமுக., முன்னாள் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது பாதிக்கப்பட்ட மக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சின்னமொடச்சூர் திரு.வி.க.வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அப்பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெனார்த்தனம். இவர் டிஎம்இ., படித்துள்ளார். இவருக்கு வேலை வாங்கி தருவதாக கோபியைச் சேர்ந்த அதிமுக., முன்னாள் கவுன்சிலர் தேன்மொழி ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தியாகராஜன் புகார் அளித்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: எனது மகன் ஜெனார்த்தனம் டிஎம்இ படித்து விட்டு கடந்த 2015ம் ஆண்டு லேப் அசிஸ்டெண்ட் வேலைக்கு தேர்வு எழுதினார். அப்போது கோபி நகராட்சி 17வது வார்டு அதிமுக., கவுன்சிலராக இருந்த தேன்மொழி, அவரது கணவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ரூ.4 லட்சம் கொடுத்தால் லேப் அசிஸ்டெண்ட் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதை நம்பி ரூ.4 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், இதுவரை எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதுதொடர்பாக நான் பாலசுப்பிரமணியம், தேன்மொழியிடம் கேட்டபோது 2015ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் வேலை கிடைத்து விடும் என கூறினர். ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் எனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. என்னை போல பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்துள்ளனர். எனவே பணமோசடி செய்த பாலசுப்பிரமணியம் மற்றும் தேன்மொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.