வீடுகளில் புகுந்து 12 பவுன் திருட்டு

பவானி, செப். 25: பவானி, சித்தோட்டில் பூட்டியிருந்த வீடுகளின் கதவை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   பவானி அருகே உள்ள திப்பிசெட்டிபாளையம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (75). ஓய்வுபெற்ற காகித ஆலை பணியாளர். தனியே வசித்து வரும் இவர் தளவாய்பேட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம் வீட்டுக்குள் சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 7 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து பாலசுப்ரமணியம் பவானி போலீசில் புகார் அளித்தார்.

 சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் உமாசங்கர் (36). பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி

வருகிறார்.  இவரது மனைவி சுகந்தி, குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் குடும்பத்தார் அனைவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். முருகேசன் மட்டும் வீட்டின் மாடியைப் பூட்டிவிட்டு தரைதளத்தில் தங்கியிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும்போது மாடியில் உள்ள அறையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முருகேசன் சித்தோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடக்கிறது. பவானி, சித்தோடு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற துணிகர திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: