ஈரோடு, செப். 25: ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (31). இவருக்கு மனைவி, மகளும் உள்ளனர். தினேஷ்குமார் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளர். இந்நிலையில், தினேஷ் குமார் மனைவி, குழந்தை நேற்று முன்தினம் காலை அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் தினேஷ் குமார் வீட்டைப் பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டின் சாவியை அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கார் சாவியோடு சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தபோது அவர் வீட்டில் வைத்திருந்த 18 பவுன் தங்க காசு மற்றும் லேப்டாப் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் வீட்டில் பொருத்தி இருந்த 2 சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து பார்த்தார். அப்போது நிறுவனத்தில் சக டிரைவராக பணியாற்றிய ஈரோடு கிண்ணம் பாளையம் சிந்தனை நகரை சேர்ந்த தர்மலிங்கம் மகன் கமலேஷ் (26) என்பவர் வீட்டிற்குள் வந்து, நகைகளை திருடியது தெரியவந்தது.