×

பதவி பறிபோகும் என்ற மூடநம்பிக்கையால் அண்ணா சிலையை கண்டு பதறியோடும் அரசியல் கட்சியினர்

திருவெண்ணெய்நல்லூர், செப். 25:  திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியின் மைய பகுதியில் அறிஞர் அண்ணாவின் சிலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அவரின் சிலைக்கு ஆண்டு தோறும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் கட்சியினர் சிலையை சீரமைப்பு செய்து வண்ணம் தீட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கட்சியினர் யாரும் இந்த சிலையை கண்டு கொள்வதில்லை. அதை பற்றி கட்சியினரிடம் கேட்டபோது அந்த சிலையை சீரமைத்தாலோ அல்லது அதற்கு மாலை அணிவித்தாலோ அவர்களின் பதவி உடனே பறிபோய்விடும் என்று கூறினர். மேலும் சிலரிடம் விசாரணை செய்ததில் கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து சென்றதாகவும் அவரின் பதவி சிலதினங்களில் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  அந்த வதந்தியின் எதிரொலியாக அன்று முதல் இன்று வரை கட்சி பொறுப்பு மற்றும் உயர் பதவியில் உள்ளவர்கள் யாரும் இந்த சிலைக்கு மாலை அணிவிக்க முன்வருவது இல்லை. சில நேரங்களில் நிர்வாகிகள் இந்த சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டால். அதை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் கையில் கொடுத்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதுபோன்ற வதந்தியால் சிலையை சீரமைக்க யாரும் முன்வராமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.  இதனால் அண்ணா சிலை சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போது கூட பெயரளவில் மாலை அணிவிக்கப்பட்டது என்று சமூகஆர்வலர்கள் கூறியுள்ளனர். மாவட்ட நிர்வாகிகள் இதை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை