×

காவலர் தேர்வு விவகாரம் வாலிபர் தற்கொலை முயற்சி

புதுச்சேரி, செப். 25: புதுவையில் காவலர் தேர்வு வயதுவரம்பு விவகாரத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையில் காவலர் தேர்வு வயது வரம்பை தளர்த்தும் விவகாரத்தில் கவர்னர், முதல்வர் இடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. அரசின் கோப்புக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி தர மறுத்துவிட்ட நிலையில், மாணவர் கூட்டமைப்பினர் இத்தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.ஆனால் இம்மனுவில் வயது வரம்பை உயர்த்துவதற்கான போதிய ஆதாரங்கள் சுட்டிக் காட்டப்படாததால் நீதிபதிகள் அறிவுறுத்தலின்படி மனு வாபஸ் பெறப்பட்டது.இந்த நிலையில் முத்திரையர்பாளையத்தை சேர்ந்த வினோத்குமார் (23) என்பவர், இத்தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், அது ஏமாற்றத்தில் முடிந்ததால் உறவினர்கள் அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தூக்க மாத்திரைகளை அதிகளவில் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மயக்கமடைந்த அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாணவர் கூட்டமைப்பினர் அங்கு சென்று வினோத்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். காவலர் தேர்வு வயது வரம்பை தளர்த்துவது தொடர்பாக வினோத்குமார் போராட்டக் குழுவினருடன் இணைந்து குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...