மானூர், செப்.25: மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (44). இவரது மனைவி ராஜலெட்சுமி (40). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் வீடு திரும்பினர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் 2.30 மணி வரை அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக ஆறுமுகம் கடையில் திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியதால் கடையில் இருந்த டி.வி., குளிர்சாதன பெட்டி, தையல்மிஷின், மினிவிசிறி மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும். நேற்று காலை கடையை திறக்க வந்த ஆறுமுகம் தம்பதியினர் தீ விபத்து ஏற்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.