வேலூர், செப்.25: மகாத்மா காந்தி 150வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கும், தூய்மை பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா வரும் அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மத்திய அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாட்டில் 16 ரயில்வே மண்டலங்களில், வரும் அக்டோபர் 2ம் தேதியன்று 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்களில் கழிவறை, பிளாட்பாரங்கள், பயணிகள் தங்கும் அறைகள் போன்றவற்றை தூய்மைப்படுத்த வேண்டும். மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும்.அதோடு மகாத்மா காந்தி வந்து சென்ற ரயில் நிலையங்களான சென்னை, திருவனந்தபுரம், நெல்லூர், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.