நள்ளிரவில் ஆற்றுக்கு அழைத்துச்சென்று சத்துணவு பெண் அமைப்பாளர் படுகொலை * சடலம் ஆற்றில் புதைப்பு * கள்ளக்காதலன் போலீசில் சரண் திருப்பத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் பயங்கரம்

திருப்பத்தூர், செப்.25: கள்ளக்காதல் விவகாரத்தில் சத்துணவு பெண் அமைப்பாளர் கல்லால் தாக்கி கொலை செய்து, சடலம் ஆற்றில் புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக கள்ளக்காதலனான டெய்லரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் அருகே உள்ள ரெட்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் சுதா(32). இவர் நாச்சியார்குப்பத்தில் உள்ள ெதாடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பசுபதி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.கணவர் இறந்ததால் சுதா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சதீஷ்(32) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து, கணவன், மனைவி போலவே வாழ்ந்து வந்தனர். தீவிர காதலர்களாக மாறிய சுதாவும், சதீசும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் சதீஷ் நேற்றுமுன்தினம் இரவு சுதாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது சுதா வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சதீஷ் கடும் அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் சதீஷ் வருவதை பார்த்த சுதாவும், அவருடன் இருந்த அந்த நபரும் உஷாரானார்கள். உடனடியாக அந்த ஆசாமி அங்கிருந்து தப்பியோடினார்.இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சதீஷ், ‘என்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் எப்படி நீ இருக்கிறாய்’ என்று சுதாவிடம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது. நீண்ட நேரம் நடந்த தகராறில் அதிகாலை 2 மணியளவில் இருவரும் சமாதானமடைந்து உள்ளனர்.

இருப்பினும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசையுடன் இருந்த நிலையில் தனக்கு துரோகம் செய்துவிட்ட கள்ளக்காதலி சுதாவை விட்டுவிடக்கூடாது என சதீஷ் முடிவெடுத்தார். அதன்படி, சுதாவிடம் நைசாக பேசி அவரது மொபட்டில் அங்குள்ள ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச்சென்றார். அப்போது இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.ஆனால் துரோகத்தால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ் அங்கிருந்த பெரிய கல்லை தூக்கி சுதாவின் தலையில் போட்டுள்ளார். இதில், சுதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சதீஷ், ஆற்றிலேயே குழிதோண்டி சுதாவின் சடலத்தை புதைத்துள்ளார். தொடர்ந்து சுதாவின் மொபட்டை அருகே இருந்த விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு சென்றுள்ளார்.பின்னர், நேற்று காலை சதீஷ் குரிசிலாப்பட்டு ேபாலீஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு துரோகம் செய்த கள்ளக்காதலியை கொலை செய்து ஆற்றில் புதைத்துவிட்டேன் எனக்கூறி சரண் அடைந்தார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஆற்றுப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரித்து வருகிறார்.நள்ளிரவில் ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச்சென்று கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: