×

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்பு

சத்தியமங்கலம், செப்.21: சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றை கடக்க முயன்ற போது நீரில் மூழ்கி இறந்தவர்களில் நேற்று மேலும் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை காலனியை சேர்ந்த 13 பெண் கூலித்தொழிலாளர் நேற்று முன்தினம் செண்பகபுதூர் அருகே உள்ள, மேட்டூர் கிராமத்திற்கு நாற்று நடவுப்பணிக்கு சென்று விட்டு மாலை 4 மணியளவில் ஆலத்துக்கோம்பைக்கு புறப்பட்டனர்.வழக்கமாக இவர்கள் ஆட்டோவில் சத்தியமங்கலம் பாலம் வழியாக செல்வார்கள். நேற்று முன்தினம் இவர்கள் ஆட்டோவில் செல்லாமல், ஆற்றில் இறங்கி சென்றுள்ளனர். தற்போது, ஆற்றில் ஆயிரம் கனஅடி நீர் செல்வதால் அப்பகுதியில் ஆழமாக இருந்தது தெரியாமல், 4 பெண்கள் நீரில் மூழ்கி மாயமானார்கள். இதைக்கண்ட மற்ற பெண்கள் கூச்சலிட்டனர்.
தகவல் அறிந்து வந்த கிராமத்தினர் ஆற்றில் குதித்து மல்லிகா (45), சரசாள் (55) ஆகியோரை மீட்டனர். இதில் சரசாள் சத்தியமங்கலம் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மல்லிகா சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை தொடர்ந்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் சென்று மாயமான வசந்தா (45), பெரியமணி (55) ஆகியோரை தேடினர். இதில் நேற்று முன்தினம் மாலை பெரியமணியின் உடல் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய வசந்தாவின் சடலம் செம்படார்பாளையம் படித்துறையில் நேற்று காலை மீட்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்கள் ஆற்றில் மூழ்கி தத்தளித்தபோது, 10 பெண் தொழிலாளிகளை அேத பகுதியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மகன் ரஜினி மற்றும் சரவணன் மனைவி லதா ஆகியோர் காப்பாற்றியுள்ளனர். இவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு