திருப்பூர்,செப்.21:திருப்பூரில் மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவர்கமலஹாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தொழில்துறை வெளி மாநிலங்களுக்கு செல்ல மத்திய,மாநில அரசு இரண்டுமே காரணம். முடிந்த பின்பு ஆறுதல் தெரிவிப்பதை விட இழப்பு ஏற்படும் முன்பே அதற்கான தீர்வை அரசுகள் காண வேண்டும். கிராமங்களில் எங்களுக்கான பலம் அதிகமிருப்பதை உணர்கிறோம். நான் இங்கு வந்தது வாக்குறுதி அளிக்க இல்லை, செய்ய வேண்டியதை திட்டமிட்டிருக்கிறோம் என்பதை சொல்வதற்காக. மீண்டும் திருப்பூர் பழைய வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.அதுவே இந்தியாவின் பெருமையும் கூட. இதற்கான விதையை விதைத்து வருகிறேன்.தமிழகத்திற்காகவும்,தொழில்துறைக்காகவும் எங்கள் மக்கள் நீதி மய்யம் தயாரித்துள்ள செயல்திட்டங்களை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.உங்கள் துறை சார்ந்த குறைகளை எனக்கே அனுப்புங்கள். நாம் இனைந்து சரி செய்ய முயற்சி செய்வோம். மும்முனை தாக்குதலால் 30 ஆண்டு இல்லாத சரிவு பின்னலாடைதுறையில் ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளவைகளால் சரிவை சந்தித்துள்ளீர்கள். அரசு தவறு செய்துவிட்டது.அதை சுட்டிக் காட்டியுள்ளீர்கள் சரி செய்வோம்.இங்குள்ள வியாபாரத்தை தெலுங்கானாவில் வரவேற்கிறார்கள். அவர்களின் செயல்திட்டங்களை கேட்டறிந்துள்ளேன். அதனை தமிழகத்தில் செயல்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு கமலஹாசன் கூறினார்