ஓடும் பஸ்சில் பயணியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது

சேலம், செப்.21: சேலம் அம்மாபேட்டை மாரி உடையார்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(42). இவர் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு டவுன் பஸ்சில் ஏறி வந்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியை கடந்தநிலையில், பஸ்சிற்குள் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர், திடீரென சீனிவாசனை தாக்கி அவரிடம் இருந்த ₹150 பணத்தை பறித்தனர். அப்போது அவர், சத்தம் போட்டார். இதர பயணிகள், அந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பஸ்சை நிறுத்திவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பள்ளப்பட்டி போலீசார் வந்து, அந்த 2 பேரையும் பிடித்து, ஸ்டேஷனுக்கு கொண்டுச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், உத்திரபிரதேசத்தை சேர்ந்த அர்ஜூன்அமர்மோ வர்மா (30), பஞ்சாப்பை சேர்ந்த ரவிக்குமார் (30) எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள், வேறு எங்காவது வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: