பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்ய கொடைக்கானல் வந்த சென்னை காதலர்கள் மீட்பு

கொடைக்கானல், செப். 21: சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த நூர்முகமது மகன் முகமது முஸ்தபா (22). இவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொடைக்கானலுக்கு வந்தனர்.  குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ‘எனது மகளுக்கு அடுத்த மாதம்தான் 18 வயது நிறைவடைகிறது. மைனர் பெண்ணான எனது மகளை, முகமது முஸ்தபா கடத்தி சென்று விட்டார்’ என்று தெரிவித்துள்ளார். இதன்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் தேடி வந்தனர்.

இதனிடையே காதல்ஜோடி மீது சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விடுதிக்கு சென்ற போலீசார் இருவரிடமும் விசாரித்தனர். அப்போது இருவரும் தற்கொலை செய்யும் முடிவுடன் சென்னையிலிருந்து கொடைக்கானல் வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. கொடைக்கானல் போலீசார் அளித்த தகவலின் பேரில், சென்னை போலீசார் கொடைக்கானல் வந்து, காதலர்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: