கொடைக்கானல், செப். 21: சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த நூர்முகமது மகன் முகமது முஸ்தபா (22). இவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொடைக்கானலுக்கு வந்தனர். குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ‘எனது மகளுக்கு அடுத்த மாதம்தான் 18 வயது நிறைவடைகிறது. மைனர் பெண்ணான எனது மகளை, முகமது முஸ்தபா கடத்தி சென்று விட்டார்’ என்று தெரிவித்துள்ளார். இதன்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் தேடி வந்தனர்.