×

‘அரசு வேலைகளை எடுத்து செய்யக்கூடாது’ மாஜி அதிமுக கவுன்சிலர் மிரட்டலால் மகளிர் குழு தலைவி தற்கொலை முயற்சி

புழல்: ‘‘அரசு வேலைகளை எடுத்து செய்யக்கூடாது’’ என்று முன்னாள் அதிமுக கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததால், மகளிர் சுய உதவிக்குழு தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் அடுத்த மொண்டிமா நகர், முனீஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). இவரது மனைவி ரமணி (47). அப்பகுதி மகளிர் குழுவின் தலைவி. இவரது வீட்டில் மகளிர் குழுக்களின் சார்பில் நாப்கின் பொருட்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் குழு பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் இருந்த ரமணி திடீரென புடவையால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் மாலை ரமணி வீடு திரும்பினார். இரவு அவரது கணவர் ராமச்சந்திரன் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

இதேப்பகுதியில் வசிக்கும் முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன், நடராஜன், ராதிகா, சங்கீதா மற்றும் யுவனேஸ்வரி ஆகிய 5 பேரும், ‘‘நீங்கள் இனி உங்களது மகளிர் சுயஉதவி குழு மூலம் பாடிநல்லூரிலுள்ள குப்பை தரம் பிரித்தல் மற்றும் நாப்கின் தயாரிப்பு உள்ளிட்ட அரசு வேலையை செய்யக்கூடாது’’ என்று ரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
புகாரை பார்த்த செங்குன்றம் போலீசார், ‘‘இது எங்களது எல்லைக்குள் வராது. சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்’’ என கூறியுள்ளனர். சோழவரம் போலீசார், ‘‘அங்கே செல்லுங்கள்’’ என்று கூறி நள்ளிரவு வரையில் அலைக்கழித்துள்ளனர். பின்னர் ஒரு வழியாக சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரை பெற்றுக்கொண்டு, ‘‘இந்த இடம் செங்குன்றமா? சோழவரமா? என கிராம விஏஓவிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று கூறி, ரமணி கணவரை அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் அப்பகுதி மகளிர் குழு பெண்களிடையே, பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...